டிஃப்பனி பிரார் ஒரு முறை பேருந்தில் ஏற ஒரு பேருந்து நிலையத்தில் தன்னுடைய வெள்ளை பிரம்பை பிடித்துக் கொண்டு பேருந்துக்காக காத்திருந்தார். அந்த சமயம் அந்த வழியே சென்ற ஒரு வயதான கறிகாய் வியாபாரி அவர் அருகே வந்து பத்து ரூபாயை அவர் கையில் கொடுத்தார். சமூக தொண்டிற்காக தேசிய விருது பெற்ற டிஃப்பனி தான் வளமாக இருப்பதால் இந்த பத்து ரூபாய் தனக்கு தேவை இல்லை என எவ்வளவு கூறினாலும், அந்த வியாபாரி அந்த பணத்தை திரும்பி பெற மறுத்துவிட்டார். கண் தெரியாத ஒரு ஏழை பெண்ணுக்கு தானம் கொடுத்து புண்ணியம் சம்பாதிக்க வேண்டும் என தான் விரும்புவதாக மீண்டும் மீண்டும் கூறினார்!!
ஊனமுற்றோர்கள் பிறரை சார்ந்தே இருப்பார்கள் என்ற தவறான எண்ணம் மிக்க படித்தவர்களிடம் கூட மிகப் பரவலாக உள்ளது. “’உன்னால் பிறர் உதவி இல்லாமல் குளித்து ஆடை மாற்றிக் கொள்ள முடியுமா?’ என்றெல்லாம் மக்கள் இன்னமும் கேட்கிறார்கள்!”, என்று புன்னகையுடனும், நகைச்சுவை உணர்வுடனும் கூறுகிறார் முப்பது வயதான டிஃப்பனி. அவர் குடும்பத்திற்கு சம்பந்தமே இல்லாத பலர் அவரை ஏன் திருமணம் செய்து கொடுக்கவில்லை என அவர் தந்தையை கேட்கிறார்கள்! நண்பர்களோவெனில், தந்தையிடம் “நீங்கள் வெளிநாடு செல்லும்போது எப்படி தைரியமாக உங்கள் பெண்ணை தனியே விட்டு விட்டு செல்கிறீர்கள்?” என்று கேட்கிறார்கள்!
ஆனால் டிஃப்பனி இப்போது போல எப்போதுமே யாரையும் சாராமல் இருந்ததில்லை. அவர் பெற்றோர்கள் அவரை மிகுந்த பாதுகாப்புடனேயே வளர்த்தார்கள். பன்னிரண்டு வயதில் அவர் தன் தாயை இழந்தார். தந்தை ராணுவத்தில் பணி புரிவதால், அடிக்கடி இட மாற்றம் செய்ய வேண்டி இருந்தது. இதனால், அடிக்கடி பள்ளிகள் மாற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பல பள்ளிகள் மிகவும் பாரபட்சம் காட்டின. உயர் நிலை பள்ளி படிக்கும்போது அவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவரை இன்னமும் அவர் “வினிதா அக்கா” என்று அன்புடன் நினைவு கொள்கிறார். தன் அடிப்படை தேவைகளை பிறர் உதவி இன்றி தானே செய்து கொள்ள இந்த வினிதாதான் அவருக்கு பயிற்சி அளித்தார். காலப் போக்கில் இந்த வினிதா தாயின் ஸ்தானத்திலேயே இருப்பது போல உதவினார். இருந்தாலும், டிஃப்பனி எங்குமே பிறர் உதவியுடனேயே எங்கும் சென்று கொண்டிருந்தார். தன் பதினெட்டாம் வயதில்தான் முதல் முறையாக தானே யார் உதவியையும் நாடாமல் பயணிக்க ஒரு சாதனத்தை பயன் படுத்தினார்.
அவரிடம் இருந்த வெள்ளை பிரம்பு, அவருக்கு பெரும் சுதந்திரத்தை கொடுத்தது. அதை தட்டிக்கொண்டு நகரில் நடந்து, பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து வண்டிகளில் பயணித்து, ஆங்கிலம் பயின்று, B.Ed பட்டம் பெற்று, ஊனமுற்றோர் உரிமைகளுக்கு போராடி, paragliding, skydiving போன்ற வானத்திலிருந்து குதிக்கும் சாகச விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்று பற்பல சாதனைகளை படைத்தார். 2012ம் ஆண்டு “ஜ்யோதிர்கமய” என்ற அரக்க்கட்டளை ஒன்றை நிறுவினார். இதன் ழூலம் பயணம் செய்தல், யோகா, கணினி திறன்கள் போன்ற வாழ்க்கைக்கு உதவும் பற்பல திறமைகளை கண் தெரியாதவர்களுக்கு போதித்தார். இந்த அறக்கட்டளை கிராமப் புறத்தில் உள்ள கண் தெரியாதவர்களுக்கு நடமாடும் பள்ளி, மற்றும் நடமாடும் பயிற்சி முகாம்கள் போன்றவைகளை நடத்துகிறது.
சிறு வயதில் பல பள்ளிகளில் படித்தால், இவருக்கு பல மொழிகள் தெரியும். தாய் மொழி ஹிந்தி தவிர தமிழ், மலையாளம், நேபாலி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் நன்கு பேசுவார். புனைவு புத்தகங்கள் படிப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக பெண்களை மையமாக, பெண்களின் கண்ணோதத்துடன் எழுதிய குடும்பக் கதைகளில் இவருக்கு அலாதியான விருப்பம். அனிதா தேசாய் எழுதிய “Fasting, Feasting”, கிரண் தேசாய் எழுதிய “The Inheritance of Loss” போன்ற புத்தகங்கள் இவருக்கு மிகவும் பிடிக்கும் “ஊனத்தில் பல சாத்தியங்கள் உண்டு!” என்று முடிக்கிறார்!