பாட்னாவைச் சேர்ந்த சந்தீப் குமார் (38) சிறுவயதில் தனது தந்தை அகிலேஷ் மிஸ்ராவிடம் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். போட்டி நடந்து கொண்டிருந்த மொயின்-உல்-ஹக் மைதானத்திற்கு மிஸ்ரா தனது குழந்தையை சைக்கிளில் அழைத்துச் சென்றார். "தயவுசெய்து என் மகனைப் பார்க்க அனுமதியுங்கள்" என்று அவர் பாதுகாவலர்களிடம் கெஞ்ச, அவர்கள் ஒப்புக்கொண்டனர். சந்தீப்பைத் தோளில் தூக்கிக் கொண்டார். "கிரிக்கெட் ஸ்டேடியம் பற்றிய எனது முதல் பார்வை அது. பச்சைப் புற்கள், மேலே நீல வானம்... இது சொர்க்கம் என்று நினைத்தேன்" என்று தனக்குப் பிடித்த நினைவுகளில் ஒன்றை சந்தீப் நினைவு கூர்கிறார். ஆனால் இது ஒரு கசப்பான நினைவு, ஏனெனில் அவரது தந்தை இப்போது இல்லை: அவர் கடந்த ஆண்டு தீபாவளி அன்று ஒரு இரு சக்கர வாகன விபத்தில் இறந்தார்.
"club foot " என்ற ஊனத்துடன் பிறந்த சந்தீப் (அவரது வலது குதிகால் உள்நோக்கி திரும்பியுள்ளது), தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை விரும்பினார், ஆனால் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று கனவு கண்டிருக்க மாட்டார். இருப்பினும், அவர் விளையாட்டில் நுழைந்து தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் ஆனார்! மண்ணெண்ணெய் வியாபாரியான அகிலேஷ் மிஸ்ரா மற்றும் இல்லத்தரசியான சர்வாணி தேவி ஆகியோரின் மூத்த மகனான சந்தீப்புக்கு பிரதீப் என்ற சகோதரரும், அஞ்சலி என்ற சகோதரியும் உள்ளனர். "என் குடும்பம்தான் என் பலம்" என்கிறார் அவர். "எனது இயலாமை காரணமாக அவர்கள் ஒருபோதும் என்னை குறைவாக எண்ணவில்லை. என் தந்தை எனக்கு மிகப்பெரிய ஆதரவாளராக இருந்தார். உண்மையில் அவர் எனக்கு ஒரு கால்பந்து வாங்கித் தந்து அதை எனது வலது காலால் உதைக்க ஊக்குவித்தார்."
சந்தீப் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, பிரதீப்புடன் அவரது ஜிம்னாஸ்டிக் கிளப்புக்கு செல்வது வழக்கம். பயிற்சியாளர் சுரேந்தர் குமார் விஸ்வகர்மா சந்தீப்பை கவனித்து விளையாட்டை முயற்சிக்க ஊக்குவித்தார். "ஆரம்பத்தில் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் பயிற்சியாளர் எனது திறமையை அங்கீகரித்து என்னை நம்பினார்," என்று அவர் நினைவு கூர்ந்தார். அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் என்னை இன்று இந்த அளவிற்கு மாற்றியுள்ளது. அஞ்சலி தனது மூத்த சகோதரர்களுடன் சேர்ந்து ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியில் ஈடுபட்டார்; இருப்பினும், அவரும் பிரதீப்பும் வேறு துறைகளில் கிளைத்தனர்.
அஞ்சலி மும்பையைச் சேர்ந்த நடிகை: இந்தி மற்றும் போஜ்புரி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். நடனம் பிரதீப்பின் ஆர்வமாக மாறியது; துபாயின் பாலிவுட் பூங்காவில் பணிபுரியும் நடனக் கலைஞரான இவர் டான்ஸ் இந்தியா டான்ஸ் (இந்தி) மற்றும் நாச் நச்சியா (போஜ்புரி) ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். நெட் (NET) தேர்வில் வெற்றி பெற்று புவியியலில் எம்.ஏ படித்த சந்தீப், ஜிம்னாஸ்டிக்ஸில் முன்னேற உறுதியாக இருந்தார். 2015 சிறப்பு ஒலிம்பிக்கில் பங்கேற்ற அவர், 2023 ஆம் ஆண்டில் இந்திய அணியின் ஒரு அங்கத்தினராக இருந்தார், அப்போது அவர்கள் 111 பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்கள். ஆனால், அவர் தனிப்பட்ட புகழை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளவில்லை. மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது அவரது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். அவர் அகாடமி ஆஃப் ஜிம்னாஸ்டிக்ஸ் என்று அழைக்கப்படும் தனது சொந்த விளையாட்டு அகாடமியை நடத்தி வருகிறார், அங்கு அவர் குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும், ஆட்டிசம் போன்ற அறிவுசார் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கும் பயிற்சி அளிக்கிறார். ஒரு விளையாட்டு நிகழ்வில் ஊனமுற்ற குழந்தைகளை முதன்முதலில் சந்தித்ததை அவர் நினைவு கூர்ந்தார். "ஆரம்பத்தில் நான் சற்று ஆதங்கமாகவும் ஆர்வமுடனும் இருந்தேன் - அவர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள்? ஆனால் அவர்களை களத்தில் எவ்வளவு அதிகமாகப் பார்த்தேனோ, அந்த அளவுக்கு நான் பிரமித்துப் போனேன். எங்கள் அகாடமியில் இந்த குழந்தைகளை முதன்மைப்படுத்த முயற்சிக்க விளையாட்டுகளைப் பயன்படுத்துகிறோம். திறமை வாய்ந்த குழந்தைகளை கண்டறிந்தால், அவர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும் பயிற்சி அளிக்கிறோம்,'' என்றார்.
சந்தீப் பல 'அதிகாரப்பூர்வ' தொப்பிகளை (பதவிகளை) அணிகிறார்: பீகார் பாராலிம்பிக் குழுவின் செயலாளர், சிறப்பு ஒலிம்பிக் பாரத் விளையாட்டு இயக்குநர் மற்றும் சிறப்பு ஒலிம்பிக் பீகார் பகுதி இயக்குநர் தவிர, பெருமூளை வாதம் தொடர்பான இந்திய விளையாட்டு கூட்டமைப்பின் தேசிய விளையாட்டு இயக்குநராகவும், இந்திய சக்கர நாற்காலி ரக்பி சம்மேளனத்தின் விளையாட்டு இயக்குநராகவும் உள்ளார். சக்கர நாற்காலி ரக்பி வீரர்கள் பொதுவாக விபத்துக்களைத் தொடர்ந்து முதுகெலும்பு காயங்களுக்கு ஆளானவர்கள் என்று அவர் விளக்குகிறார். அவர்களில் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை எண்ணங்களுக்கு ஆளாகிறார்கள். விளையாட்டு என்பது அவர்களுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தவும், வாழ்க்கையில் ஒரு புதிய நோக்கத்தைக் கொடுக்கவும் ஒரு வழியாகும்.
சந்தீப்புக்கு தினசரி அட்டவணை நிரம்பி வழிகிறது. அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள தனது அகாடமிக்கு செல்கிறார். காலை 5 மணிக்குத் தொடங்கும் பயிற்சிக்குப் பிறகு, அவர் வாடகைக்கு எடுத்துள்ள அருகிலுள்ள அறைக்குச் சென்று, புத்துணர்ச்சியடைந்து, மாலை 4 மணி வரை அவர் பணிபுரியும் பாராலிம்பிக் கமிட்டி அலுவலகத்திற்குச் செல்கிறார். பின்னர் பயிற்சிக்காக அகாடமிக்கு வந்து இரவு 9 மணிக்கு வீடு திரும்புகிறார். தனது ஓய்வு நேரங்களில் அவர் மலையேற்றத்தை விரும்புகிறார். சௌராசன் கோயில் மற்றும் ரோஹ்தாஸ்கர் கோட்டை போன்ற மற்றவர்களால் அதிகம் பார்க்கப்படாத 'தீண்டப்படாத' இடங்களுக்குச் செல்ல விரும்புகிறார், அங்கு அவர் "பெரும் அமைதியை" காண்கிறார். பீகாரில் உள்ள கைமூர் மலைத்தொடர் இவருக்கு மிகவும் பிடித்தது.
"எனது அகாடமியில் உள்ள சிறப்பு குழந்தைகள் எனக்கு ஒரு புதிய அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுத்துள்ளனர்" என்று சந்தீப் கூறுகிறார். "நான் அவர்களின் நண்பர், வழிகாட்டி, பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர், அவர்களின் மாணவனும் கூட! அவர்கள் மூலம் நான் ஒவ்வொரு நாளும் புதிய ஒன்றைக் கற்றுக்கொள்கிறேன்."